மதிமுகவில் இருந்து துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
மதிமுக துவங்கிய காலத்தில் இருந்து வைகோவுடன் பயணம் செய்தவர் மல்லை சத்யா. அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளரான மல்லை சத்யாவுக்கும், முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது. இந்நிலையில் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ சமீபத்தில் குற்றம் சாட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மல்லை சத்யா, தன்னைத் துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார். இதையடுத்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மல்லை சத்யா நடத்தினார்.
இந்நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி மதிமுகவில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுப்பிய கடிதத்தில், “கட்சியின் சட்ட திட்டங்களை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருவதால், மல்லை சி.ஏ.சத்யாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்க உத்தரவிடப்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு கட்சியின் உடமைகள், ஏடுகள், பொறுப்புகள், கணக்குகள் அனைத்தையும் கட்சியின் பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்படுகிறது.
அவரது கருத்துக்கோ, செயல்பாட்டுக்கோ மதிமுக பொறுப்பேற்காது. அவர் மதிமுக கட்சி பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக் கூடாது. மதிமுக தலைமை நிர்வாகிகள் குறித்து கருத்து பதிவு செய்யக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா, என் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை சுமத்திய துரை வைகோ மீது நடவடிக்கை இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.