துணைவேந்தர் நியமனத்திற்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

புதுடில்லி: தமிழக பல்கலைகளுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து, 10 சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து, திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *