உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான் என்று நடிகர் விஜய்க்கு ஆதரவாக நடிகர் சஞ்சீவ் ட்விட் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்திருக்கிறது. மறுபுறம் இந்த விவகாரம் திமுகவின் திட்டமிட்ட சதி என தவெகவினர் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு 20 லட்ச ரூபாய்நிதி வழங்குவதாக விஜய் அறிவித்துள்ளார். அத்துடன் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். அத்துடன் போலீஸ் பாதுகாப்பு அனுமதி தர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
கரூரில் 41 பேர் இறப்பு திட்டமிட்ட சதி என்று உயர் நீதிமன்றத்தில் தவெக மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய்க்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் சம்பவத்தால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள விஜய்க்கு அவரது நண்பரும், நடிகருமான சஞ்சீவ் ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் இன்று ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான்” என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு விஜய் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
