அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத் திட்டத்தில், 29, 30, மற்றும் 4-ம் தேதிகளில் தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, முறையே அக்.2, 3, மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும். வரும் அக். 2-ம் தேதி தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி தருமபுரி அரூர், அக்.3-ம் தேதி தருமபுரி, பாலக்கோடு பென்னாகரம், அக்.6 -ம் தேதி நாமக்கல், நாமக்கல் பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெறும்.
ஏற்கெனவே அக். 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் நடைபெறுவதாக அறிவித்திருந்த பிரசாரக் கூட்டம், அதே தேதியில் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
