கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்த வேலுச்சாமிபுரம் பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக வெற்றிக் கழகத்தலைவர் நடிகர் விஜய், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் மேற்கொள்கிறார். நேற்று முன்தினம் கரூர் மாவட்டம், வேலுச்சாமி புரத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கரூர் அசம்பாவித சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் கூட்டநெரிசலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிகழ்வின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
