திமுக அமைச்சர்களை ரெய்டுகள் மூலம் பயமுறுத்தலாம் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கூறினார்.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. அவரது மகன், மகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த ரெய்டு நடவடிக்கைக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் மூலமாக திமுகவினரை அச்சுறுத்த முடியாது. தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. திமுக அமைச்சர்களை ரெய்டுகள் மூலம் பயமுறுத்தலாம் என பாஜக அரசு நினைக்கிறது. மத்திய பாஜகவை எதிர்க்கும் கட்சிகளைத் தாக்கும் கருவியாக விசாரணை அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. எந்த பயமுறுத்தலாலும் திமுகவினரை அச்சுறுத்தி விட முடியாது என்று தெரிவித்தார்.