தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் 77 லட்சம் பேர் நீக்கம்?

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் 77 லட்சத்து 52 ஆயிரம் பேர் வரை நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், டிசம்பர் 1-ம் தேதி கணக்குப்படி 6 கோடியே 36 லட்சம் எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில் 5 கோடியே 18 லட்சம் வாக்காளர்களிடன் இருந்து கணக்கீட்டு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 25 லட்சத்து 72 பேர் உயிரிழந்தவர்களாகவும், ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் 3 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு வாக்குரிமை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது தவிர, 39 லட்சத்து 27 ஆயிரம் நிரந்தரமாக இடம் பெயர்ந்ததும், 8 லட்சத்து 95 ஆயிரம் பேர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வரும் 16ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டில் மொத்தம் 77 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *