தேர்தல் ஆணையம் தனது கடமையைத்தான் செய்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க சென்னைக்கு இன்று வந்துள்ளார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. இறந்து போன வாக்காளர்கள், அல்லது இரட்டை வாக்காளர்கள் இருந்து இருக்கிறார்கள். அதை எல்லாம் சரி செய்யும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. அதைத்தான் அவர்கள் செய்துள்ளனர். உண்மையாக சொல்லப் போனால், இந்த தேர்தலில் எஸ்ஐஆர் பணி மேற்கொள்ள வேண்டும் என்பது அனைத்து கட்சிகளின் விருப்பமாகும்.
ஆனால், திமுகவினர் அரசியலுக்காக அதனை எதிர்த்தார்கள். எஸ்ஐஆர் பணி தேவை என்று அனைவருக்கும் தெரியும். எஸ்ஐஆர் என்பது இரட்டை வாக்காளர்கள், இறந்து போன வாக்காளர்களை நீக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையும் கூட, அதை தான் தேர்தல் ஆணையம் செய்துள்ளது என்றார்.
