ரூ.19,650 கோடி மதிப்பில் புதிய விமான நிலையம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ரூ.19,650 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில், ரூ.19,650 கோடி செலவில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்து சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தை இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ”இந்த விமான நிலையம் ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக இருக்கும். இன்று, மும்பை முழுவதும் எளிதாகப் பயணிக்க வசதியாக நகரம் முழுவதும் நிலத்தடி மெட்ரோவையும் கொண்டுள்ளது. மும்பை போன்ற ஒரு நகரத்தில் இவ்வளவு கவனமாக கட்டுமானத்துடன் நிலத்தடி மெட்ரோவைத் தொடங்குவது ஒரு பெரிய சாதனை” என்றார்.

புதிய விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச வழித்தடங்கள் தொடங்க திட்டமிடப்படுள்ளது. தற்போது இங்கு நான்கு முனையங்கள், இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. மேலும் ஒரு பிரத்யேக விவிஐபி முனையமும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த கட்டுமானம் 2026 தொடங்கி 2030-ம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவி மும்பை சர்வதேச முனையம் லண்டனை தலைமையகமாக கொண்ட ஜஹா ஹதீத் கட்டிடக் கலைஞர்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் 47 மெகாவாட் சூரிய சக்தியை உருவாக்கும். மின்சார பஸ் சேவைகளையும் இயக்கும். இது வாட்டர் டாக்ஸி சேவை மூலம் இணைக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமான நிலையமாக மாற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *