தமிழ்நாட்டில் பிளஸ் 1 வகுப்பிற்கான பொதுத்தேர்வை ரத்து செய்துஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை-2025 வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத் தேர்வை, பிளஸ்-1 வகுப்புக்கும் கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டது. பிளஸ்-1 வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நேரடியாக பிளஸ் 2 வகுப்பு பாடங்களை தனியார் பள்ளிகள் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவதை தவிர்ப்பதற்காகவும், பிளஸ் 1 வகுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் கொண்டு வரப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது.
இந்த நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு 8 ஆண்டுகளுக்கு பிறகு, பொதுத்தேர்வு இனி கிடையாது என மாநில பள்ளிக்கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி வந்தனர். இந்த நிலையில் தேர்வு ரத்து என்ற அறிவிப்பால் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025ஐ செயல்படுத்தும் விதமாக பிளஸ் 1 வகுப்பிற்கான பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். முந்தைய பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் 2030-ம் ஆண்டு வரை அரியர் தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
