செங்கோட்டையன் நீக்கம்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முழுவதும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டார்:-
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும்; கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும் செங்கோட்டை கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அடிப்படை உறுப்பினர் பொறுப்பும் நீக்கம்
மேலும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான செங்கோட்டையன், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஓபிஎஸ், தினகரனுடன் நட்பு
நேற்று, அதிமுகவிலிருந்து வெளியேறிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் பசும்பொன் முத்துராமலிங்கனார் குருபூஜை விழாவுக்கு ஒன்றாகச் சென்ற நிலையில், இன்று செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
		 
		 
		