பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நடந்த விசாரணையில், அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்து விட்டதாக இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. அத்துடன் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து அனில் அம்பானியின் வீடு, அலுவலகம் உட்பட 35-க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அவருக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது. அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேவேளை, அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்குமுன் கைது செய்தனர்.
இந்த நிலையில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதில் அனில் அம்பானியின் பாந்த்ரா இல்லம், வீட்டு மனை, டெல்லி, நொய்டா, மும்பை, கோவா, புணே, காஞ்சிபுரம், சென்னையில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேசன் அலுவலகங்கள் உள்ளிட்டவை அடங்கும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அனில் அம்பானியின் நிறுவனங்களில் நடந்த சோதனை அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
