கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் நேற்று முன்தினம் இரவு ஆண் நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை போதையில் வந்த மூன்று இளைஞர்கள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸார் நேற்று இரவு துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,”கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார்.
