திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று (டிசம்பர் 2) தனது 93-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் பொன்னாடை போர்த்தி புத்தகங்களை பரிசளித்தார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோரும் கி.வீரமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், தொடரட்டும் ஆசிரியர் அய்யாவின் தொண்டறம். தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
பெரியார் திடலும், அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. பெரியாரியத் தடியும், பேரறிஞரின் மதியும், முத்தமிழறிஞரிடம் கற்ற உழைப்பும் கொண்டு திராவிட மாடல் நல்லாட்சி நிலைக்கச் செய்வோம், ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
