எஸ்ஐஆர் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியவுடனே தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் வலியுறுத்தினர். ஆனால் அவை தலைவர் மறுப்பு தெரிவித்ததால் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று ஒரு நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் முடங்கின.
இந்த அமளிக்கு மத்தியில் மணிப்பூர் ஜிஎஸ்டி மசோதா மட்டும் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (டிசம்பர் 2) காலை அவை கூடியது. இன்றும் எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர் கட்சியினர் வலியுறுத்தினர். இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் அவையின் மையப்பகுதியில் கூடிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எஸ்ஐஆர் பணிகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
