மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர்: முதலமைச்சர் அறிவிப்பு

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டது.

தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மேலும் வித்திடும் வகையில் மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் ரூ.150.28 கோடி செலவில் புதிய மேம்பாலம் நாளை திறக்கப்பட்டு வீரமங்கை வேலுநாச்சியர் மேம்பாலம் என பெயர் சூட்டப்படுகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், மதுரை தொண்டி சாலை, அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் தொடங்கி ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழியாக மதுரை சுற்றுச்சாலையில் இணைந்து அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் முடிவடைகிறது. இச்சாலை மதுரை மாவட்டத்தையும், சிவகங்கை மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலையாகும்.

இச்சாலையில் அதிகமான கல்வி நிறுவனங்கள் அமையப் பெற்றுள்ளன. மேலும் போக்குவரத்து செறிவு அதிகமாக உள்ள காரணத்தினால் இப்பகுதியில் உள்ள மூன்று சந்திப்புகளிலும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை நிலவி வந்தது. மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையிலும் நெரிசலின்றி வாகனங்கள் செல்லும் வகையிலும் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச.7) திறக்கிறார்.

இத்திட்டத்தால் மதுரை தொண்டி சாலை, கோரிப்பாளையம் முதல் சுற்றுச்சாலை வரை போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். 950 மீட்டர் நீளமுள்ள இந்த முக்கியமான மேம்பாலத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்து வெள்ளையரிடம் இருந்து சிவகங்கையை மீட்டு சிறப்பான ஆட்சி புரிந்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *