புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். அப்போது இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி தான். ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள்தான். மற்ற மாநிலங்களில் இருப்பதை போல் இங்கேயும், அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் என்று அனைத்து பொருட்களும் வழங்கும் முறை சீராக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு ஆகியவை பொங்கல் தொகுப்பில் இடம் பெறும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி இன்று (டிசம்பர் 10) தெரிவித்துள்ளார்.
