தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரேஷன் கடையிலிருந்த கைரேகை வைக்கும் இயந்திரத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கே சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் லிங்கத் துரை. இவரது மகன் ரமேஷ், கட்டிட தொழிலாளி. இவரது முதல் மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். மூக்கம்மாள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.
இதனிடையே மகாலட்சுமி என்பவரை ரமேஷ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். சூர்யா தனது தாத்தா லிங்கத்துரையுடன் தனிவீட்டில் வசித்து வருகிறார்.
பொங்கல் பரிசுத் தொகை பஞ்சாயத்து
இந்நிலையில், ரமேஷ் தனது 2-வது மனைவி மகாலட்சுமியுடன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு சென்று டோக்கனை கொடுத்து விற்பனையாளர் ராசுக் குட்டியிடம் பரிசு தொகுப்பை கேட்டுள்ளார். அப்போது, ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆத்திரத்தில் செய்த விபரீதம்
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் ரேஷன் கடையிலிருந்த கைரேகை வைக்கும் இயந்திரத்தை கையோடு தனது வீட்டிற்கு ரமேஷ் எடுத்துச் சென்றுவிட்டார்.
ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்
அதன்பிறகு, சிறிதுநேரம் கழித்து மீண்டும் கடைக்கு வந்து இயந்திரத்தை கொடுத்துவிட்டார்.
அத்துடன், கடை ஊழியர் ராசுகுட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி அரசு ஊழியரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, எந்திரத்தை தூக்கி சென்றதாக மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ரமேஷ் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
