மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி சார்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள , 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை .276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, ஜூன் 16-ம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முடிவை எதிர்த்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகே தூய்மைப் பணியாளர்கள் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரி உழைப்போர் உரிமை இயக்க தலைவர் கு.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “இரு மண்டலங்களிலும் பணியாற்றும் 2,042 நிரந்தர பணியாளர்கள், வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும், 1,953 தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த நிறுவன விதிகளின்படி பணியமர்த்தப் படுவார்கள் என்றும் கூறப்பட்டாலும், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த பிரச்னை தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தொழிலாளர் நீதிமன்ற அனுமதியின்றி, தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, பதில் மனு தயார் செய்ய அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை மறுநாள் (ஆகஸ்ட்- 13 தேதி) தள்ளி வைத்து உத்தரவிட்டார்.