சென்னையில் எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள அவரது அறை ஆகிய இடங்களுக்கு இன்று காலை 6 மணியளவில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மகன், மகள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எம்எல்ஏ விடுதிக்குள் அமலாக்கத்துறையினர் அத்துமீறி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார். இதன் புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.