கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த இரண்டு அணைகளில் இருந்தும் மொத்தம் 95 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. எனவே அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு விரைவில் வரத் தொடங்கி அணை மீண்டும் இந்த ஆண்டில் 5-வது முறையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து உபரிநீர் எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 50ஆயிரம் கனஅடி முதல் 70ஆயிரம் கனஅடி வரை திறந்து விடப்படலாம். இதுதொடர்பாக நீர்வளத்துறை சார்பில் காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்பட 11 ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.