சென்னை: ”அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், யார் அந்த சார்? என்ற பதிலுக்காக காத்திருப்போம்” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளன என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தி.மு.க., அரசோ அவர்களின் வக்கீலை வைத்துக்கொண்டு, “சார்” பற்றியெல்லாம் பேசினால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்று மிரட்டினால், விசாரணையில் உள்ள குளறுபடிகளை மூடி மறைத்துவிடலாம் என்று நினைத்தது.
எங்கள் சந்தேகமானது, நீதிபதி அளித்த தீர்ப்பின் மீதல்ல, தமிழக காவல் துறையாலும், அரசு வழக்கறிஞர்களாலும் நீதிபதியின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கின் ஆவணங்களை பற்றியும் விசாரணையின் முழுமைத் தன்மையை பற்றியும் தான். இன்று எங்கள் தமிழக பா.ஜ.,வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மிக முக்கியமான பல கேள்விகளை ஆதாரத்தோடு கேட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலினை கேட்கிறேன். யார் அந்த சார்?
* டிசம்பர் 24ம் தேதி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் ஏன் உடனடியாக விடுவிக்கப்பட்டார்?
* டிசம்பர் 23ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு குற்றவாளி ஞானசேகரன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த போலீஸ் யார்?
* சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், தி.மு.க., வட்ட செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம், அண்ணா பல்கலை ஊழியர் நடராஜன் ஆகியோரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?