நெல்லையிலிருந்து ஷீரடிக்கு நவம்பர் 9-ம் தேதி சிறப்பு ரயிலை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்கவுள்ளது.
இந்த சிறப்பு ரயில் மூலம் திருநெல்வேலியில் இருந்து ஷீரடி மற்றும் ஜோதிர்லிங்கத் தலங்களுக்குச் சிறப்புப் பயணம் மேற்கொள்ள இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தச் சிறப்பு ரயில் பாரத் கௌரவ் என்று பெயரில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 9-ம் தேதி பயணத்தை தொடங்குகிறது. எட்டு பகல், ஏழு இரவுகள்கொண்ட இந்த பயணம் நவம்பர் 16-ம் தேதி நிறைவடைகிறது.
இந்தப் பயணத்தின்போது ஷீரடி சாய்பாபா கோயில், நாசிக், சனி சிங்கனாப்பூர், பண்டரீபுரம் மற்றும் மந்திராலயம் ஆகிய புனிதத் தலங்களை பயணிகள் தரிசிக்கலாம் நெல்லையிலிருந்து புறப்படும் இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய நிலையங்கள் வழியாகச் செல்லும். பயணச்சீட்டில் உணவு, தங்குமிடம், கோயில்களுக்குச் செல்வதற்கான உள்ளூர் போக்குவரத்து மற்றும் வழிகாட்டி வசதிகள் ஆகியவை அடங்கும். தென் தமிழக பக்தர்களுக்கு வட இந்திய புண்ணியத் தலங்களுக்குச் சென்று வர அரிய வாய்ப்பை இந்த சிறப்பு ரயில் அளிப்பதாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.