தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை விஜயகாந்த் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தேமுதிக நிறுவனரான மறைந்த நடிகர் விஜயகாந்தின் 73-வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்களால், கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திரை உலகினர், அரசியல் தலைவர்கள் பலரும் விஜயகாந்த் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை, எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர், தனது கடின உழைப்பால் பொதுவாழ்விலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், உள்நோக்கமற்ற அவரின் ஈகை குணத்தையும், மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் அவர் மீதான அன்பையும் நினைவுகூர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.