கரூரில் ரவுண்டானா பகுதியில் அனுமதி கொடுத்து இருந்தால் 41 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
சென்னையில் சட்டமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒவ்வொரு கட்சி தலைவர் வாரியாக பேசும் போது, கரூர் சம்பவத்தில் என்னென்ன நடந்தது என்பதை நாங்கள் சுட்டிக் காட்டினோம். முதலமைச்சர் பேசும்போது, ஒருதலைபட்சமாக, அவர்கள் பக்கம் எந்த குறையும் இல்லை என்று சொன்னார். ஆனால் நடந்தது என்ன என்பதை பலமுறை நாங்கள் ஊடகங்களில் சொல்லியிருந்தாலும் கூட, இன்று சட்டசபையிலும் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கரூர் வேலுச்சாமிபுரத்தில், பத்து ரூபாய் பாட்டில் கமிஷன் என்று சொல்லும்போது அவர் மீது செருப்பு வீசப்பட்டு இருக்கிறது. அத்துடன் உடனடியாக ஜெனரேட்டர் ஆப் செய்யப்பட்டு லத்தி சார்ஜ் நடந்திருக்கிறது. ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார். 5 டிஎஸ்பி, 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்ததாக சொன்னார். அங்கு போலீஸார் யாருமில்லை. டிஎஸ்பியும் இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது. அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கிற மாதிரி, முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி போலீஸார் செயல்படுகின்றனர்.
எதிர்க்கட்சியினர் என்ன கூட்டம் நடத்தினாலும் கேட்கிற இடத்திற்கு அனுமதி தருவதில்லை. நீதிமன்றம் சென்று தான் நாங்கள் அனுமதி பெற வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமல்ல, கரூரில் ரவுண்டானா பகுதியில் பிரசாரம் நடத்த தவெகவினர் அனுமதி கேட்டிருந்தனர். அந்த இடத்தில் அனுமதி கொடுத்து இருந்தால் 41 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் குறுகலான இடத்தில் அனுமதி கொடுத்து, 41 பேர் சாவிற்கு தமிழக அரசு காரணமாக இருந்தது வருத்தத்திற்கும், வேதனைக் குரியதாகவும் இருக்கிறது” என்றார்.
