பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு அக்.30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார்.
சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு முத்துராமலிங்க தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் 63-வது குருபூஜை விழா நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாள் ஆன்மீக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குரு பூஜை விழாவாகவும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு அக். 30-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் செல்ல இருக்கிறார். பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பசும்பொன் செல்வதற்கு முன்னதாக அக். 28, 29-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
