நடிகர், இசையமைப்பாளர் அடுத்தடுத்து மரணம்… தமிழ் திரையுலகம் அதிர்ச்சி

நடிகை மனோரமாவின் மகன் நடிகர் பூபதி, இசையமைப்பாளர் சபேஷ் ஆகியோர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ் திரையுலகின் பழம் பெரும் நடிகை, ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றவர் மனோரமா. நான்கு தலைமுறை நடிகர், நடிகைகளோடு நடித்த அவர் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். அவரது ஒரே மகன் பூபதி(70). குடும்பம் ஒரு கதம்பம் படத்தின் நடிகராக அறிமுகமான பூபதி, சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை.

அவரை வைத்து தூரத்து பச்சை என்ற படத்தை மனோரமா தயாரித்தார். ஆனால், எதிர்பார்த்த அளவு படம் வெற்றியடையவில்லை. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த பூபதி, குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் பெரிதாக சினிமாவில் வெற்றியடைய முடியவில்லை என்று கூறப்படுகிறது இந்த நிலையில், பூபதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70. மறைந்த பூபதிக்கு ராஜராஜன் என்ற மகனும், அபிராமி, மீனாட்சி என்ற இரு மகள்களும் உள்ளனர். பூபதியின் இறுதிச்சடங்கு நாளை(அக்டோபர் 24) நடைபெறுகிறது.

அதேபோல், இசையமைப்பாளர் சபேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 68. இசையமைப்பாளர் தேவாவின் தம்பியான சபேஷ், தன் அண்ணனின் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் ஆவார். தனது சகோதரர் முரளியுடன் சேர்ந்து சபேஷ் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக மிளகா, இம்சை அரசன் 23ம் புலிகேசி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், பொக்கிஷம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து’ படங்களில் பணியாற்றியுள்ளனர்.

திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தின் தலைவராக இருந்த சபேஷ் (எம்.சி. சபேசன்). கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12:15 மணியளவில் அவர் காலமானார். சபேஷின் மறைவுக்கு திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தினர் மற்றும் திரைப்பட நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *