ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடித்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்த போட்டியின் போது, பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஸ்ரேயாஸ் ஐயர். ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, கடினமான முறையில் ஓடி வந்து, டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். வெற்றிகரமாக கேட்ச் பிடித்தபோதிலும், தரையில் வேகமாக மோதியதில் அவரது விலா எலும்புப் பகுதியில் பலத்த அடிபட்டது.
இதனால் வலியால் துடித்த அவர் சிகிச்சைக்காக பெவிலியன் அழைத்து செல்லப்பட்டார். அதன்பின் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் காயத்தின் தன்மை குறித்து ரசிகர்களிடையே கலக்கம் ஏற்பட்டது. இதனிடையே அவரது காயம் குறித்து பிசிசிஐ கூறுகையில், “ஸ்ரேயாஸ் ஐயரின் இடது விலா எலும்பில் பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. அவரது காயம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தது.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையின் ஐசியூவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரின் உடலுக்குள் ரத்தக்கசிவு இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
