பாஜகவுடனான கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கரூரில் உயிரிழந்த குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து தவெக தலைவர் விஜய் நேற்று சந்தித்து பேசினார். இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல், தன்னைத் தேடி வந்து துக்கத்தில் இருப்பவர்களை சந்திக்க வைத்த விஜய் என சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நெல்லையில் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்திற்கு முதன்மை காரணம் விஜய் தான். இந்த சம்பவத்தில் தவறு இல்லை என்றால் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்?. குற்றத்திற்கு காரணமான வரையே சிபிஐ விசாரிக்காது எனில் பிறகு எப்படி நியாயம் வெளிவரும்?. யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்?.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையில் இருக்கும்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தனிமையில் சந்தித்து பேசியது ஏன்?. ரூ.20 லட்சம் பணம் கொடுத்துவிட்டு நேரில் சந்தித்து பேசினால் உண்மை எப்படி வெளியே வரும். கூட்டணியில் சேர்ப்பதற்காகத்தான் ஆதவ் அர்ஜுனா, விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. பாஜகவுடனான கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள். சிபிஐக்கு மாற்றியதும் முன்ஜாமீன் மனுவை ஆனந்த் திரும்பப் பெறுகிறார் எனில் சிபிஐ காப்பாற்றதானே செய்கிறது” என்று அவர் கூறினார்.
