மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவரும், கிளை செயலாளருமான ராஜேந்திரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் 12 வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பவர் சாந்தி. இவரது கணவர் ராஜேந்திரன்(51). இவர் அப்பகுதியில் டூவீலர் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் அப்பகுதியில் நடமாடும் தையல் தொழிலாளியின் 16 வயது மனநலம் குன்றிய மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், அவிநாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இப்புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், ஊத்துக்குளி பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதன் பின் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
