நடிகர் அஜித்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரி, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விமானங்கள், விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால், வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை. எனவே இந்த மிரட்டல் புரளி எனத் தெரிய வந்தது. இந்த மிரட்டல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
