தமிழ்நாட்டில் நவம்பர் 29-ம் தேதி புதுக்கோடடை, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,” குமரிக்கடல் பகுதியில் உருவான தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல்- தெற்கு இலங்கை அருகில் நிலவி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாகவும், பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இந்த நிலையில், மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக, இன்றும் (நவம்பர் 25), நாளையும் ((நவம்பர் 26) கனமழைக்கான மஞ்சள் அலர்ட் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (நவம்பர் 27) திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. நவம்பர் 28-ம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29- ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு நவம்பர் 29ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர்,திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30- ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அன்றைய தினம் விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
