நடிகர் ரோபோ சங்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மதுரையைச் சேர்ந்த மேடைக்கலைஞரான ரோபோ சங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இதன் மூலம் திரையுலகில் நுழைந்த ரோபோ சங்கர், காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். பல குரல்களில் பேசுவதில் வல்லவரான இவர், நடிகர் விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த ரோபோ சங்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது திடீரென அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகறிது. நீர்ச்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்குப்பின் ஓரிரு நாட்களில் ரோபோ சங்கர் வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.