மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு வரும்போது எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்தார். அவருடன் அதிமுக மூத்த நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர். அமித்ஷாவை சந்தித்து விட்டு கிளம்பும் போது முகத்தை கைக்குட்டையைக் கொண்டு மூடியவாறு எடப்பாடி பழனிசாமி சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களுக்கு தன்மானம் தான் முக்கியம் என்று செப்டம்பர் 15-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பயங்கர சவுண்டு விட்டார். வானிலை காரணமாகத்தான் பிரசாரத்தை தள்ளி வைத்ததாக கதையெல்லாம் விட்டார். ஆனால், டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். ஏற்கெனவே உள்துறை அமைச்சரின் அழைப்பின் பேரில் தான் டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி செல்கிறார் என்ற தகவல் வந்து விட்டது. ஆனால், இவ்வளவு பொய் சொல்லி யாரை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? இதற்கு முன் எங்கேயாவது இப்படி பார்த்திருக்கிறீர்களா? கூட்டணி கட்சித் தலைவர்களைப் பார்த்துவிட்டு வரும் போது இப்படி முகத்தை மூடிக்கொண்டு ஓடி வருவது ஏன்? அத்துடன் ஊடகங்கள் மூலமாகத்தான் எடப்பாடியின் அருகில் அமர்ந்திருந்தது அவரது அன்பு மகன்தான் என்று எனக்கு தெரிந்தது. அவர்கள் இரண்டு பேரும் முகத்தை மூடிக்கொண்டு வருகிறார்கள். உள்துறை அமைச்சர் வீட்டில் இருந்து யாரும் முகத்தை மூடிக்கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தென்மாவட்ட மக்களால் மதிக்கப்படக்கூடியவர். அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதை யார் வேண்டுமானாலும் எடுத்து சொல்லலாம். ஆனால் 10.5 சதவீதம் என்று அறிவித்து ஒரு கண்ணுக்கு வெண்ணெயும், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. 105 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இவருக்கு எதிராக இருக்கிறார்கள் என்று தெரிந்து அதை சரி செய்வதற்காக
முயற்சி எடுக்கிறார். தன்மானம் மிக்கவர் என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு எப்படி வெளியே வந்தார் என்று அனைவருக்கும் தெரியும். அண்ணன் பழனிசாமியை இன்று முதல் முகமூடியார் பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும். நல்லவேளை முகமூடி கொள்ளையர் மாதிரி அவர் வரவில்லை. இல்லையென்றால் போலீஸ் பிடித்து உள்ளே போட்டிருப்பார்கள்” என்று தெரிவித்தார்.