அமைச்சர்களே பொறாமைப்படும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை கொளத்தூரில் திறந்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையில், 15 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். இதன் பின்னர் அவர் விழாவில் பேசுகையில், “கொளத்தூருக்கு வந்தாலே எனர்ஜி வந்துவிடும், புத்துணர்ச்சி வந்துவிடும். மணமக்களை வாழ்த்துகிற விழா நடந்து கொண்டிருக்கிறது. நமது குடும்பத்தில் ஒரு திருமண நிகழ்வு வந்தால் எப்படி மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறோமோ அதே போல் வந்திருக்கும் அனைவரின் உணர்வுடந்தான் இருக்கிறோம். கொளத்தூர் என்று சொன்னாலே சாதனை என்றோ, ஸ்டாலின் என்ற ஞாபகம் வரும்.
ஒரு மாவட்டத்திற்கு ஒன்று மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை செல்வேன். ஆனால் கொளத்தூருக்கு மட்டும் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்துவிடுவேன். பல மாவட்டங்களில், பல நிகழ்ச்சிகளிலும் தரும் வரவேற்பில் வரும் மகிழ்ச்சியை விட கொளத்தூருக்கு வரும்போது நீங்கள் தரும் வரவேற்பு தான் அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளையாக குறிப்பாக ஒரு நல்ல பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் இருக்கிறேன். அமைச்சர்களே பொறாமைப்படும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது . கொளத்தூர் தொகுதிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. ஏனெனில், அதிக மாநகராட்சி பள்ளிகள் அதிக நூலகங்கள், அதிக மருத்துவமனைகள் உள்ள தொகுதி கொளத்தூர் தான்” என்றார்.
