தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை மதுரை வருகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் அணிவகுக்க உள்ளனர்.
கூட்டத்திற்கு முன்னதாக இன்று காலை புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதியம் 2.45 மணியளவில் மதுரை விமான நிலையம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மதுரையில் பிரதமர் மோடி
மோடியின் வருகையையொட்டி மதுரை நகரம் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளார், அங்கு மிக அதீத பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
