ரூபாய் நோட்டுகளில் இருந்தும் காந்தியின் புகைப்படத்தை நீக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி ஜான் பிரிட்டாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி ஜான் பிரிட்டாஸ் செய்தியாளர்களிடம் இன்று (டிச.,23) கூறுகையில், ” காந்தியின் புகைப்படத்தை நீக்கப்படுவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மறுத்து வரும் நிலையில், முதல்கட்டமாக உயர்நிலைக்கு குழு அளவிலான ஆலோசனைகள் ஏற்கெனவே நடந்து விட்டன. இனி வெறும் யூகமாக மட்டும் இருக்காது. நமது ரூபாய் நோட்டுக்களில் இருந்து காந்தியின் உருவப்படத்தை நீக்குவது, தேசத்தின் சின்னங்களை மாற்றி எழுதும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்” என்றார்.
காந்தியின் உருவப்படத்துக்குப் பதிலாக இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்கள், பாரத மாதா உருவம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1996-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம் பெற்றது பின்னர் அனைத்து நோட்டுகளிலும் அவரின் புகைப்படம் இடம் பெற்றது.
கடந்த 2022-ம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் போன்றோரின் புகைப்படங்கள் ரூபாய் இடம் பெற மத்திய அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியானது. காந்தியின் படத்தைத் தவிர வேறு எந்த தலைவரின் புகைப்படத்தையும் இடம் பெறச்செய்வதற்கான திட்டமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த நிலையில், ஜான் பிரிட்டாஸ் இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை மாற்ற வகை செய்யும் வகையில் வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வதார உறுதியளிப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
