சென்னை வேளச்சேரியில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை சரமாரியாக வெட்டி அதை “ரீல்ஸ் கொடூரம்” வெளியிட்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞனின் பெயர் பிரவீன். 24 வயதாகும் அவர் சென்னை வேளச்சேரி பகுதியில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சென்னை நேரு நகர் 2வது தெருவில் ஒரு வீட்டிற்கு உணவு வழங்கச் சென்றபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றது.
தப்பியோட முயன்ற பிரவீனை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவரது கை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரைப் பார்த்து அந்தப் பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர்.
சரமாரியாக வெட்டி “ரீல்ஸ்” வீடியோ
இந்தத் தாக்குதலின் போது, அந்த கும்பலில் ஒருவன் தனது செல்போனில் முழுச் சம்பவத்தையும் படம்பிடித்துள்ளான். தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே, அதற்கு ஒரு பிரபல ரவுடிசப் பாடலை பின்னணியில் சேர்த்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
தங்களை அந்தப் பகுதியில் பெரிய “தாதாக்கள்” என்று காட்டிக்கொள்வதற்காகவும், எதிராளிகளைப் பயமுறுத்துவதற்காகவும் இந்த ரீல்ஸை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
காவல்துறை கண்காணிப்பு:
இந்த வீடியோ சில நிமிடங்களிலேயே வைரலாகி, சென்னை சைபர் கிரைம் போலீசாரின் கவனத்திற்குச் சென்றது. இதுவே அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முக்கிய ஆதாரமாகவும் மாறியது.
கைது செய்யப்பட்டவர்கள் யார்?
இதையடத்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யா என்ற இளைஞரையும், 2 கல்லூரி மாணவர்களையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
