திமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திமுக பொதுச்செயலாளரும், தமிழ் நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். இவர் கடந்த 2006-2011-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக 2011 ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகிய இருவரையும் விடுவித்து கடந்த 2017- ம் ஆண்டு வேலூர் சிறப்பு நீதிமன்றம் ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. மேலும், துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக விசாரணையை நடத்தி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் விசாரணை நீதிமன்றத்துக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சொத்து குவிப்பு வழக்கில் தன்னை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் துரைமுருகன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி திபான்கர் தாத்தா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்ததோடு கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டனர் மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.