நான் எந்தக் கட்சியையும் குறை சொல்ல வரவில்லை…கரூரில் நடிகை அம்பிகா பேட்டி

நான் கரூர் வந்துள்ளது குறித்து என் மீது எந்தச் சாயமும் பூச வேண்டாம். நான் எந்தக் கட்சியைச் சார்ந்தும் பேச வரவில்லை என்று நடிகை அம்பிகா கூறினார்.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இரண்டு வயது குழந்தை துருவ் விஷ்ணு இல்லத்தில்  அவரது குடும்பத்தினரை  சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல் தெரிவித்தார். கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்த மனைவி, இரு மகள்களை‌ இழந்த ஆனந்த் ஜோதியையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்துள்ளனர்.சம்பவம் குறித்து அறிந்த உடனே வர வேண்டுமென நினைத்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இன்று கரூர் வந்துள்ளேன். யாரையும், எந்தக் கட்சியையும் குறை சொல்வதற்காக நான் வரவில்லை. சம்பவம் நடந்ததற்கு யார் மீது தவறு என்பதை சொல்வதற்கும் நான் வரவில்லை.

அரசியல் கூட்டங்களுக்கு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு செல்லக்கூடாது என்று அரசும், கட்சிகளும் அறிவுரை கூறுகின்றனர். ஆனால், அதையும் மீறி குழந்தைகளை தூக்கிக் கொண்டு செல்கின்றனர். நான் கரூர் வந்துள்ளது குறித்து என் மீது எந்தச் சாயமும் பூச வேண்டாம். நான் எந்தக் கட்சியைச் சார்ந்தும் பேச வரவில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *