அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நவம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005 ஜனவரி 9-ம் தேதி பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்க அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க ஐ.ஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி பிப்.1-ம் தேதி கைது செய்யப்பட்டார். மார்ச் மாதத்தில் ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்ள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகள் இருவர் செப்டம்பர் மாதம் வடமாநிலத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களின் ஹரியாணாவை சேர்ந்த ஓம்பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் பெற்ற 3 பெண்கள் தலைமறைவாகினர். கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையில் இறந்தனர். மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேருக்கு எதிரான வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தார்.
இவ்வழக்கில் 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட நான்கு பேருக்கு எதிரான இந்த வழக்கில் நவம்பர் 21-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தை கொலை செய்த ராஜஸ்தான் பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படமாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
