புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அக். 24-ம் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு நாளை (அக்.22) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்காலில் அதி கனமழை பெய்யக்கூடும்.
புதுச்சேரியில் நாளை(அக்.22) அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட், காரைக்காலில் நாளை கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அம்மாநில மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
