நேபாளத்தில் 700 அடி உயரத்தில் இருந்து மலைச்சரிவில் ஜீப் கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
நேபாளத்தில் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றிக் கொண்டு முசிகோட்டில் உள்ள கலங்காவிலிருந்து அத்பிஸ்கோட் நகராட்சியின் சியாலிகாடி பகுதியை நோக்கி ஜீப் சென்று கொண்டிருந்தது. காத்மாண்டுவில் இருந்து மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள பாபிகோட்டின் ஜர்மாரே என்ற பகுதியில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், 700 அடி மலைச்சரிவில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே 7பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் போலீஸார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை நீண்ட நேரம் போராடி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 10 பேர் சாலேவில் உள்ள ருகும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
