முன்பகை… டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்!

முன்பகை காரணமாக டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்காக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், காஞ்சிபுரம் சட்டம், ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதில் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட நீதிபதிக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் ஏற்கெனவே முன்பகை உள்ளது. அதில்தான் இப்படி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்றார். இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீதான வழக்கு விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, முன்பகை விவகாரத்தில் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அரியலூர் லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் அல்லி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *