கோவையிலிருந்து பிரத்யேக உடைக்குள் மறைத்து பைக்கில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரூ.72 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தை கேரளா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், கோவை–கேரளா இடையே தங்கக் கடத்தலும், அதற்காக ஹவாலா முறையில் பணப்பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தங்கம் மீதான இறக்குமதி வரியை ஒரு சதவிகிதமாக்கும் வரை தங்கக் கடத்தலைத் தடுப்பது கடினம் என்கின்றனர் தங்க நகை உற்பத்தியாளர்கள்.
தமிழக–கேரள எல்லையில் கோவை நகரம் அமைந்துள்ளதால், கோவைக்கும், கேரள மாநிலத்துக்குமான சமூக, வர்த்தகத் தொடர்புகள் அதிகம். மணல், செங்கல் போன்றவையும் அதிகளவில் கடத்திச் செல்லப்படுவதாக வருவாய் துறை தகவல்கள் கூறுகின்றன.
அதேபோன்று, இரு மாநிலங்களிலிருந்தும் போதைப் பொருட்கள், ரகசிய முறையில் கடத்திச் செல்லப்படுவதும் அதிகரித்துள்ளது என, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கூறுகின்றனர்.
போதைப் பொருள் கடத்தலை தடுக்க தீவிர சோதனை
கடந்த மே 27ம் தேதி கோவையிலிருந்து வேலந்தாவளம் வழியாக கேரளாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்ட போலீசாருக்கு ரகசியமான தகவல் கிடைத்துள்ளது. அதனால் வேலந்தாவளம் வழியாக வந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை கேரளா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும், கொழிஞ்சாம்பாறை போலீசாரும் இணைந்து சோதனையிட்டுள்ளனர். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேரைப் பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில், அவர்களின் வாகனங்களில் எந்தவிதமான பொருட்களும் பிடிபடவில்லை.