பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் தோளோடு தோள் நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் தொடர்ந்து தோளோடு தோள் நின்று துணை நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ரூ.1,350 கோடி செலவில் நடைபெற்று வரும் தோல் இல்லா காலணி ஆலை அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 26) ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” உளுந்தூர்பேட்டையில் வரவிருக்கும் காலணி ஆலையை இன்று நான் பார்வையிட்டேன். பௌ சென் (PouChen) நிறுவனம் உலகின் மிகப்பெரிய பிராண்டட் காலணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். உலகளாவிய வரி விதிப்புமற்றும் நிச்சயமற்ற வர்த்தகச் சூழல்கள் இருந்தபோதிலும், அவர்கள் தமிழகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளனர்.

வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தொழில்களுக்கு தமிழகம் தொடர்ந்து தோளோடு தோள் நின்று துணை நிற்கும். PouChen நிறுவனம் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கள்ளக்குறிச்சியில் ரூ.2,302 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதனால் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உள்ளூர் வேலைவாய்ப்புக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

2024- ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற தமிழக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பெருமை எனக்குக் கிடைத்தது. இன்றைய இந்த வருகை, அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் மேற்கொள்ளப்பட்ட வேலைகளை காண ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்த நிகழ்வில் நைக் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்களான உதய் சிங் மேத்தா மற்றும் சாமி வைகுண்டமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட ஐந்து பேருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. நாம் கொண்டு வரும் ஒவ்வொரு முதலீடும் தமிழகத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்புகளாக மாறுகிறது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *