டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்றது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, உதவி ஆணையர், உதவி இயக்குநர், உதவி வனப் பாதுகாவலர் உள்ளிட்ட 70 காலியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத 2.49 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் எழுதினர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்த தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 44 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.https:/tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.