டோல்கேட் கட்டண உயர்வால் பஸ் கட்டணம் உயரும்- டி.டி.வி.தினகரன் அச்சம்!

டோல்கேட் கட்டண உயர்வால் பேருந்து கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் அவரது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழகத்தில் விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 38 டோல்கேட்டுகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான  கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 40 டோல்கேட்டுகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 38 டோல்கேட்டுகளின் கட்டணத்தையும் உயர்த்தியிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது உயர்ந்திருக்கும் இந்த டோல்கேட் கட்டணம் ஏழை, எளிய மக்களின் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழகத்தில் காலாவதியான டோல்கேட்டுகளை அகற்றக் கோரி மக்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் டோல்கேட் கட்டணத்தால் சரக்கு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணங்கள் உயர்வதோடு, பேருந்துக் கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் டோல்கேட் உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் டோல்கேட்டுகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *