பாளையை பதற வைத்த கவின் கொலை: ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாட்டை உலுக்கிய  கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயபாலனின் ஜாமீன் மனு மீதான விசாரணை செப்டம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின்குமார்(24). இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தனது காதலியை பார்ப்பதற்காக கடந்த 27.07.2025- ம் தேதி பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார். இதையறிந்த அவரின் காதலியின் சகோதரரான சுர்ஜித் கவினை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார். இந்த கொடூரக்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோர் போலீஸாரால் கைது செய்யபட்டனர். மேலும் தமிழ் நாடு அரசு கடந்த மாதம் 30-ம் தேதி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. இதன்அடிப்படையில் சிபிசிஐடியின் விசாரணையின் அடிப்படையில் கவின் கொலைச் சம்பவத்தில் உதவியதாக சுர்ஜித்தின் நண்பர் ஜெயபாலனும் கைது செய்யப்பட்டார்.அவர்கள் மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கவின் கொலை வழக்கில் மூன்றாவதாக கைது செய்யப்பட்ட ஜெயபாலன், ஜாமீன் கோரி நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் புகார்தாரர் கவினின் தாய் தமிழ் செல்வி ஆஜரானார். அவர் சார்பில் வழக்கறிஞர் பவானி பி. மோகன் ஆஜராகி வக்காலத்து தாக்கல் செய்தார். இதனைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதி, ஜெயபாலின் ஜாமீன் மனு குறித்து புகார்தாரர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *